கோடைகால ஒலிம்பிக் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக ஒலிம்பிக் தொடர் நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்ற 32 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 206 நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகிறார்கள்.
பாரீஸிற்கு வெளியில் கிட்டத்தட்ட 15,000 கிமீ தொலைவிற்கு வெளியில் நடக்கும் போட்டி என்றால் அது சர்ஃபிங் தான். இந்தப் போட்டியானது ஜூலை 27 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 2 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டிக்கு 21 நாடுகளிலிருந்து 48 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் புதிதாக் பிரேக்கிங் (பிரேக் டான்ஸ்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி போடுவார்கள். அதாவது, பாரிஸ் விளையாட்டு போட்டிகளில் ஒரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்களுக்கான போட்டிகள் இடம் பெறும். 16 பி பாய்ஸ் மற்றும் 16 பி கேர்ல்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதுவார்கள். ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. 2 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டிக்காக 32 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஈபிள் டவர் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி என்றால் பீச் வாலிபால் போட்டியானது ஈபிள் டவர் அருகில் தற்காலிகமாக ஸ்டேடியம் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. வரும் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 24 வாலிபால் அணிகள் மற்றும் 48 பீச் வாலிபால் அணிகள் போட்டி போடுகின்றன. 4 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டிக்கு 31 நாடுகளிலிருந்து 384 விளையாட்டு வீரர்கள் போட்டி போடுகின்றனர். ஒலிம்பிக் பதக்கங்கள் அனைத்தும் ஈபிள் டவரிலிருந்து எடுக்கப்பட்ட அசல் இரும்பு உலோகத்தால் உருவக்கப்பட்டது.
வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் மராத்தானில் இடம் பெற்று விளையாடும் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பொதுமக்களும் மராத்தானில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தடகளம் மற்றும் நீச்சல் என்று 2 வகைகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நீச்சல் மராத்தான் போட்டியும், ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மராத்தான் போட்டியும் நடத்தப்படுகிறது. மொத்தமாக 37 நிகழ்வுகளை கொண்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 35,000 மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் சம எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வரலாற்றில் முதல் முறையாக 10714 விளையாட்டு வீரர்களில் 5,357 ஆண்கள் மற்றும் 5,357 பெண்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸூக்கு திரும்புவதை இந்த 2024 கோடைகால ஒலிம்பிக் தொடர் குறிக்கிறது.