பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் 17ஆவது சீசன், 33ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இஷான் கிஷன் முதல் ஓவரில் அதிரடி காட்டவில்லை என்றால், பவர் பிளே முழுவதும் தடுமாற்றத்துடன் விளையாடுவது வழக்கம். தற்போதும் அதேபோல்தான், முதல் ஓவரில் அதிரடி காட்டாத நிலையில், அடுத்தும் அதிரடி காட்ட தவறி, 8 பந்துகளில் 8 ரன்களை அடித்து நடையைக் கட்டினார்.
இப்போட்டியின் மூலம், 250ஆவது ஐபிஎல் ஆட்டத்தில் ஆடி வரும் ரோஹித் சர்மா, பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 36 (25) ரன்களை மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளை எதிர்கொண்டு, 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்களை குவித்து அசத்தினார். ஐபிஎலில், இரண்டாவது முறையாக 50+ பந்துகளை, இன்று எதிர்கொண்டார்.
சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தப் பிறகு, திலக் வர்மா மட்டுமே அதிரடியாக விளையாடினார். 18 பந்துகளில் இரண்டு பவுண்டரி, சிக்ஸர்களை அடித்த அவர், 34 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இருப்பினும், ஹர்திக், டிம் டேவிட் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 10 ரன்களை மட்டும் எடுத்து, நடையைக் கட்டினார். டிம் டேவிட்டும் 7 பந்துகளில் 14 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால்தான், மும்பை அணியால் 200 ரன்களை எட்ட முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 192/7 ரன்களை அடித்துள்ளது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், முதல் நான்கு பேட்டர்கள் சாம் கரன், பிரப்சிம்ரன் சிங், ரிலே ரூசோவ், லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக தலா 2 விக்கெட்களை பும்ரா, காட்ஷி ஆகியோர் வீழ்த்தினர்.
இதனால், 14/4 என தடுமாறிய பஞ்சாப் கிங்ஸ் அணியை சாஷங் சிங் 41 (25), அசுதோஷ் சர்மா 61 (28), ஹர்மன்பிரித் கௌர் 21 (20) ஆகியோர் தூக்கி நிறுத்தினார்கள். இருப்பினும், விக்கெட் கையிருப்பு இல்லாத காரணத்தினால், பஞ்சாப் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 183/10 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.