திரைவிமர்சனம்: யாத்திசை

படத்தின் தலைப்பு யாத்திசை, தென்திசை எனும் பொருள்படும் பண்டைய தமிழ் வார்த்தையை குறிப்பிடுகிறது. 7ஆம் நூற்றாண்டில் நடைபெறும் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இக்கதையை தரணி ராசேந்திரன் இயக்கி, கே.ஜே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளார்.
குறிப்பாக இப்படத்தின் ட்ரைலர் தான் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா வாங்க பார்க்கலாம்..
ஏழாம் நூற்றாண்டில், பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழப் பேரரசும் இனைந்து போர் புரிகிறார்கள். அவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி கூட்டங்களும் துணை நிற்கிறது.
போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டிய பேரரசு, சோழ நாட்டோடு சேர்த்து, மொத்த தென்பகுதியையும் கைப்பற்றுகிறது. இதிலிருந்து தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள்.
அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் சோழ மண்ணின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என சபதம் எடுக்கிறார் எயினர் குடியின் தலைவன் கொதி. பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார்.
சொன்னபடியே ரணதீரனை வீழ்த்தி சோழ அதிகாரத்தை கையில் எடுத்தாரா கொதி? இல்லை பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை.
கதாபாத்திரங்களின் தேர்வு அருமை. கொதியாக நடித்துள்ள சேயோன், ரணதீரனாக நடித்துள்ள சக்தி இருவரின் நடிப்பு சூப்பர். இவர்கள் இருவரும் முழு படத்தையும் தோளில் தாங்கி நிற்கிறார்கள்.
இயக்குனரின் கதை தேர்வு, திரைக்கதையை அமைத்த விதம் மிகவும் சிறப்பு. சில இடங்களில் தொய்வு இருந்தாலும், பெரிதாக தெரியவில்லை. VFX காட்சிகளில் குறை இருந்தாலும், படத்தின் பல பிளஸ் பாயிண்ட் அதை மறைத்துவிட்டது.
ரூ. 8 கோடி பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மேக்கிங் செய்ய முடியும் என இயக்குனர் தரணி ராசேந்திரன் நிரூபித்து காட்டியுள்ளார். அதற்கு தனி பாராட்டு. செலவு செய்து பிரம்மாண்டத்தை காட்டாமல், தன்னுடைய மேக்கிங், முக்கியமாக படத்தின் வசனம் மூலமாக பிரம்மாண்டத்தை காட்டியுள்ளார். .
7ஆம் நூற்றாண்டு என்பதினால் அப்போது வாழ்ந்த மக்கள் பேசிய பழந்தமிழை படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் சில குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், அதை ஆய்வு செய்து சரியாக பயன்படுத்தியுள்ளனர். கலை இயக்கம் படத்திற்கு பலம். சண்டை காட்சிகள் அற்புதம். குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டுகிறது.
ஒப்பனை, ஆடை வடிவமைப்பு 7ஆம் நூற்றாண்டின் நம்பக தன்மையுடன் கண்முன் நிறுத்துகிறது. சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் எடிட்டிங் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது.