விடுமுறை நாட்களில் போக்குவரத்து விபத்துக்கள் சுமார் 15 சதவீதம் அதிகரிக்கும்- சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் விடுமுறை நாட்களில் போக்குவரத்து விபத்துக்கள் சுமார் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ராஜ்ஜியத்தில் ஒன்பது நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர்கள் மற்றும் இதர பயணிகளுக்கான சீட் பெல்ட்களை பொருத்துதல், வேக வரம்பை கவனித்தல் மற்றும் வாகனம் ஓட்டும்போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஆலோசனைகளை பொது அதிகார சபை வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளது.
வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதற்கு முன் போதுமான அளவு தூங்க வேண்டும் என்றும் மழையில் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணத்தின் போது குழந்தைகளை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வைப்பதும் முக்கியம்.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான அபராதங்களை சவுதி அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில் ராஜ்ஜியத்தில் போக்குவரத்து இறப்புகள் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளன.



