சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 40 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

இந்தியா
வட இந்தியாவில் கட்டுமானப்பணியின் போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர், இடிபாடுகளின் அடியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
“சுமார் 40 முதல் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அவர்களுக்கு இடிபாடுகள் வழியாக ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது, ஆனால் மீட்புப் பணியாளர்கள் தடையை அகற்ற முயற்சிப்பதால் மேலும் சுரங்கம் இடிந்து கீழே வருகிறது” என்று மாநிலத்தின் பேரிடர் மீட்பு அதிகாரி துர்கேஷ் ரத்தோடி கூறினார்.
சில்க்யாராவிலிருந்து தண்டல்கானை இணைக்கும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததாக உத்தரகாண்ட் காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி தெரிவித்தார்.
சுரங்கப்பாதையில் 40 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளை கவனித்து வரும் ஹைடிரோஎலக்டிசிட்டி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட் (HIDCL) அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில பேரிடர் மீட்புக் குழு (SDRF) மற்றும் போலீசார் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



