அல் ஃபயா குன்றுகள் பகுதி அதிகாரப்பூர்வமாக மூடல்

சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எமிரேட்டின் மத்திய பகுதியில் உள்ள அல் ஃபயா குன்றுகள் பகுதியை ஷார்ஜா காவல்துறை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. நவம்பர் 17, வெள்ளிக்கிழமை மாலை, ஒரு ஆசிய இளைஞன் அல் ஃபயா பாலைவனத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மீறுவதன் விளைவாக அல் ஃபயா குன்றுகள் முழுமையாக மூடப்படுகிறது என்று ஷார்ஜா காவல்துறையின் ஜெனரல் கமாண்ட் கூறியுள்ளார். சட்டவிரோதமான ஆஃப் ரோடிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் வரும் குடும்பத்தினர் அல்லது தனிநபர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி கூறுகையில், “பொதுமக்கள் பலர் விடுமுறை நாட்களில் பாலைவனப் பகுதிகளுக்குச் சென்று மழைக்காலத்தை அனுபவிக்கின்றனர், அவர்களில் இளைஞர்கள் மணல் மலையில் சவாரி செய்வதை ரசிக்கிறார்கள். இது பல விபத்துக்களுக்கு வழி செய்கிறது மற்றும் அவர்களின் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.”
குறிப்பாக விடுமுறை நாட்களில், அங்கீகரிக்கப்படாத மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதைத் தடுக்க ஷார்ஜா காவல்துறை பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியது. பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக இப்பகுதிக்கு வரும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். மணல் நிறைந்த பகுதிகளில் ஸ்டண்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, வாகன ஓட்டிகளுக்கு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டால் 999 என்ற அவசர எண்ணை டயல் செய்வதன் மூலம் உடனடியாக புகாரளிக்கலாம்.



