G20 18-வது உச்சி மாநாடு: “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.
வருடாவருடம் மாறிவரும் இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் நாளையும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.
இக்கூட்டமைப்பில் பல நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்தியா, இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாக “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” எனும் பொருள்பட வசுதைவ குடும்பகம் எனும் கருத்தை மையப்படுத்தியுள்ளது.
தற்போதைய ஜி20 தலைமையில் இந்தியா அனைவருக்குமான ஒரு உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், பருவகாலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் மற்றும் சமமான உலகளாவிய சுகாதாரம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



