தெருக்களில் இடையூறு ஏற்படுத்தியது சிறுவர்கள் குழு; 50,000 அபராதம் என எச்சரிக்கை விடுப்பு

Dubai: சிலர் முரட்டுத்தனமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதால் பல குடியிருப்பாளர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் இடையூறு ஏற்படுவதாகப் புகாரளித்தனர். விசாரணையில், தெருக்களில் இடையூறு ஏற்படுத்தியது சிறுவர்கள் குழு என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், துபாய் காவல்துறை பல குவாட் பைக்குகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து துபாய் காவல்துறை போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறியதாவது:- “பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதால், குடியிருப்புப் பகுதிகளில் இடையூறுகள் மற்றும் சத்தம் ஏற்பட்டது. சிறுவர்கள் வீடுகளை அடையும் வரை ரோந்துப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்தனர், பின்னர் அவர்களின் குவாட் பைக்குகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபாயில் வாகனப் பறிமுதல் தொடர்பான 2023-ம் ஆண்டின் ஆணை எண். 30 இன் கீழ், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது ஆஃப்-ரோடு பைக்கை நடைபாதை சாலைகளில் பயன்படுத்தினால் அதை விடுவிக்க 50,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.
“பொழுதுபோக்கு பைக்குகள் குறிப்பாக மணல் நிறைந்த பகுதிகள் மற்றும் அதுபோன்ற சூழல்களில் ஆஃப்-ரோட் டிரைவிங் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுச் சாலைகளில் அவற்றின் பயன்பாடு ரைடர்ஸ் மற்றும் பிற சாலைப் பயனர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று அதிகாரி கூறினார்
பெற்றோருக்கு எச்சரிக்கை
இந்த பைக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய துபாய் காவல்துறை, தங்கள் குழந்தைகளை இந்த பொழுதுபோக்கு மோட்டார் சைக்கிள்களை சாலைகளில் கொண்டு செல்ல அனுமதிக்கும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய பொறுப்பற்ற நடத்தை விபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கத் தவறியதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்காக இதுபோன்ற மோட்டார் பைக்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.



