சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்… 3 தலைவர்கள் இடையே கடும் போட்டி!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தர்மன் சண்முக ரத்னத்தின் தாத்தா, பாட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள் தர்மன் 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அவரது தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். தர்மன் சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார்.


