அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்து வருகிறது. கத்தார், குவைத் போன்ற அரபு நாடுகளில் பணிபுரிய செல்பவர்களில் பலர் தங்கள் குடும்பத்தினரையும் அங்கு கூட்டிச் செல்கின்றனர். இதனால் அவர்களின் பிள்ளைகள் அங்கேயே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கட்டணம் மிக அதிகமாக உள்ளதால் பள்ளிக் கட்டணத்திற்கே தங்கள் வருவாயின் பெரும் பகுதியை அவர்கள் செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலையில், அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கேயே இந்தியப் பள்ளிகளை தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த பணிக்கு மத்திய அரசு ஆதரவும், உதவியும் செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அரபு நாடுகளில் இந்தியப் பள்ளிகளை தொடங்கவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது. அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பள்ளிகள் ஓரளவுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கி வருகிறது” என முரளிதரன் கூறினார்.



