Site icon Tamil Gulf

பலமாடி கோபுரத்தின் கட்டமைப்பு சேதம்; 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

Structural damage to multi-storey tower; More than 100 families evacuated

துபாயில் உள்ள முஹைஸ்னா 4ல் உள்ள பலமாடி கோபுரத்தின் கட்டமைப்பு சேதமடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு (ஏப்ரல் 19) இரவு அந்த வளாகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரவு 8:30 மணியளவில், குடியிருப்பில் வசிக்கும் பலர் ‘நிலநடுக்கம் போன்ற’ அதிர்ச்சியை உணர்ந்துள்ளனர். இந்நிலையில், சில மணி நேரம் கழித்து, துபாய் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் வீடுகளின் கதவைத் தட்டி, உடனடியாக கட்டிடத்தை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். வெள்ளம் காரணமாக கட்டிடத்தின் ஒரு பக்கம் சேதம் அடைந்ததால், விரிசல் அடைந்து ஒரு பக்கமாக சற்று சாய்ந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமீபத்தில் பெய்த கனமழையால் கட்டிடத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், ஐந்து நாட்களுக்குப் பிறகும், அடித்தளத்தில் கார்கள் மூழ்கிய நிலையில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த நேரத்தில், கட்டிட உரிமையாளர், சிவில் பாதுகாப்பு மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் தளத்தில் இருந்தனர். அவர்கள் கட்டிடத்தை சீல் வைப்பதற்கும், அது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும் விரைவாக வேலை செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் பலர் ஹோட்டல் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர். பலர் உறவினரிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். சிலர் கட்டிடத்திற்கு வெளியே தங்கள் கார்களில் இரவைக் கழித்துள்ளனர். இதற்கிடையில், தங்குவதற்கான செலவை திருப்பித் தருவதாக கட்டிட உரிமையாளர் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version