Site icon Tamil Gulf

பிறருக்காக வேண்டிய பிரார்த்தனை – பிச்சைக்காரனின் வாழ்க்கை மாற்றிய பாடம்

பிறர் நலனுக்காக வேண்டிய பிச்சைக்காரனின் வாழ்க்கை மாற்றம்

ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார்.

அவரை பார்த்த பிச்சைக்காரன்
“சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா” என்று கேட்டான்.

அதற்குச் சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படித்தான் இருக்கும் என்றார்.

பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்ய வேண்டும் என்றான்.

அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானைப் பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது.
அவரைப் போய் பார் என்றார்.

பிச்சைக்காரன் புத்தரைப் பார்க்க புறப்பட்டான். வெகு நேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க.

பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்குச் செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது. அவள் பிறவி ஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கேட்டு எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றனர்.

அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான்.

வெகுதூரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதைக் கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார்.
அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன்.

நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன்.

நீ புத்தரிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டுச் சொல்ல வேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையைக் கடந்து பிச்சைக்காரனை விட்டுச் சென்றார்.

மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் புத்தர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.

ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ புத்தரிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுச் சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது.

பிச்சைக்காரனும் ஒரு் வழியாக புத்தர் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். புத்தரைப் பார்த்து ஆசி பெற்றான்.

புத்தர் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேளென்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார்.

பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். புத்தரோ மூன்று தான் கேட்க வேண்டும் என்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஓட்டிவிடலாம்.

ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையாவது தீரட்டும் என்று எண்ணி மூன்று பேரின் பிரச்சனையை புத்தரிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பி வந்தான்.

திரும்பி வரும் வழியில் முதலில் ஆமை என் கேள்விக்கு புத்தர் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஓட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான். உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்தது விட்டு பறந்துசென்றது.

அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

பிறகு மந்திரவாதியைப் பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விட வேண்டும் என்றான்.

மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்.

மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ, அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைக்காரன்.

மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் “அப்பா இவர் தானே அன்று இரவு நம் இல்லத்திற்கு வந்தது” என்று அவளையும் அறியாமல் கேட்டாள்.

தன் மகள் பேசியதைக் கண்ட செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்.

இந்தக் கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் பிறரின் துயரமும் மறைந்து விடும், கூடுதல் போனசாக நம் துயரமும் மறைந்து விடும்.

Exit mobile version