ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதாவது 66 சதவிகிதம் பேர் மழையால் சேதமடைந்த கார்களை சரிசெய்து வரும் நிலையில், அவர்கள் எதிர் காலத்தில் ஒரு புதிய வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளனர் என்று சந்தை மற்றும் நுகர்வோர் புலனாய்வு நிறுவனமான NIQ-GfK வெளியிட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 22 சதவீத கார் உரிமையாளர்கள் சேதத்தை மதிப்பிட்டு புதிய வாகனம் வாங்க எண்ணுகின்றனர்.
“துபாயில் சமீபத்தில் பெய்த கனமழை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்டோ மொபைல் துறையில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியது. வானிலை காரணமாக பலர் டீலர்ஷிப் அல்லது சர்வீஸ் சென்டர்களுக்கு செல்ல முடியவில்லை. இது கார் விற்பனை மற்றும் பராமரிப்பு அட்டவணையை பாதித்துள்ளது,” என்று NIQ-GfK ல் அரேபிய தீபகற்பம் மற்றும் பாகிஸ்தானின் நுகர்வோர் மற்றும் சந்தைப்படுத்தல் நுண்ணறிவு வணிகத் தலைவர் ராகுல் தீட்சித் கூறினார்.
பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 32 சதவீதம் பேர் சாலைகளில் அல்லது வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் வாகனங்கள் சிக்கிக் கொண்டதாகக் கூறியுள்ளனர்.
Guy Carpenter நடத்திய ஆய்வில், ஏப்ரல் நடுப்பகுதியில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தின் போது சுமார் 30,000 முதல் 50,000 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.