Dubai:
துபாய் அல் கவானிஜ் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று விழுந்து ஏற்பட்ட பயங்கரமான போக்குவரத்து விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்தனர்.
இரவு 11.55 மணியளவில் எதிஹாட் மால் பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்ற ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த கோர சம்பவத்தின்போது வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநரும், பயணித்த பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், “இந்த விபத்து அதிவேகமாகச் சென்றதால் ஏற்பட்டது. கடுமையான போக்குவரத்து விபத்துகளுக்கு வேகமானது முதன்மையான காரணமாகும். சாலைகளில் பொறுப்பற்ற நடத்தை குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், நியமிக்கப்பட்ட வேக வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், கவனத்தை சிதறாமல் இருக்கவும், போக்குவரத்து சட்டங்களை முழுமையாக பின்பற்றவும் அவர் கேட்டுக்கொண்டார்.