ஓமனில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ராயல் ஓமன் காவல்துறை அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து, சிக்கிய பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் மற்றும் வாகன ஓட்டிகளை மீட்டது.
ஓமானில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA ) வடக்கு அல் ஷர்கியா மாகாணத்தில் காணாமல் போன ஒருவரின் உடலை மீட்டுள்ளது. இதனால் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
CDAA ஒரு அறிக்கையில், “வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட்டில் உள்ள குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையின் தேடல் குழுக்களின் முயற்சியின் ஒரு பகுதியாக, காணாமல் போன ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன ஒரு குழந்தை உட்பட மேலும் மூன்று பேருக்கான தேடுதல் முயற்சிகள் இன்னும் நடந்து வருகிறது.
ஓமானில் ஞாயிற்றுக்கிழமை வெள்ள நீரில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஒன்பது மாணவர்கள், இரண்டு குடியிருப்பாளர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் என்று அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் பெய்த கனமழையால், ஓமனின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கின. பேருந்துகளில் சிக்கிய பள்ளி மாணவர்களையும், வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் குடும்பங்களையும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகன ஓட்டிகளையும் ராயல் ஓமன் காவல் துறையினர் உடனடியாக மீட்டனர் .
ராயல் ஓமன் காவல்துறை, ஓமன் ராயல் ஆர்மி, சிவில் பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் களக் குழுக்கள் பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
ஓமானில் உள்ள வானிலைத் துறையின் கூற்றுப்படி, தெற்கு அல் ஷர்கியா, வடக்கு அல் ஷர்கியா, அல் டாகிலியா மற்றும் அல் தாஹிரா மற்றும் அல் வுஸ்டாவின் சில பகுதிகளில் தற்போது மாறுபட்ட தீவிரத்துடன் மழை பெய்து வருகிறது.