சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: தர்மன் சண்முகரத்னம் அதிபராக வெற்றி

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


